tamilnadu

img

ஓ, அமெரிக்கா... இப்போதும் காலம் கடந்து விடவில்லை - டாக்டர் ஜிம் யாங் கிம்

கொரோனா வைரஸ் தொற்றால் இப்பூவுலகில் 10லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு 50ஆயிரத்திற்கும் மேலான மக்களை பறிகொடுத்து திணறிப் போய் நிற்கிறது உலக முதலாளித்துவத்தின் தலைமைப் பீடமும், வல்லரசு என்று கூறிக்கொள்ளும் ஏகாதிபத்திய வல்லூறுமான அமெரிக்கா. டிரம்ப் நிர்வாகம்  தனது தோல்வியை மறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. அதற்கு அமெரிக்க மாகாணங்களே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மீள வழி தெரியாமல் மக்கள் தவித்துக்கிடக்கிறார்கள். இந்த நிலையில் மஸ்ஸாசூஸெட்ஸ் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறந்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கத் துவங்கியிருக்கிறது. அந்த முயற்சிகளில் பங்கேற்றிருக்கும் இக்கட்டுரையாளர், அமெரிக்கர்களுக்கு நம்பிக்கையை விதைக்கும் விதத்தில் நியூயார்க்கர் ஏட்டில் எழுதியுள்ள கட்டுரை இது. இக்கட்டுரையை, முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா தனது டுவிட்டரில் பகிர, அமெரிக்க மக்களிடையே வைரல் ஆகியுள்ளது.

கடந்த சில வாரங்களாக, நாம் கோவிட்-19 கொள்ளை நோய் அமெரிக்க நாட்டில் உச்சக்கட்டத்தை எட்டிக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.  இதில் பெரும்பாலான நேரம், நம்மால் செய்ய முடிந்தது, பதுங்கு குழியில் இருப்பது போன்று, காத்திருப்பு மற்றும் நம்பிக்கை கொள்வது ஆகியனதான். நாம் ஒரு தடுப்பு மருந்து வந்து விடும் என நம்புகிறோம், அதற்கு எவ்வுளவு காலம் பிடிக்கும் அல்லது அவ்வாறு கண்டுபிடிக்கப்படும் தடுப்பூசி எந்தளவிற்கு வீரியத்துடன் இருக்கும் என்பது நமக்கு நிச்சயமில்லை என்றாலும்! நாம் நம்புவதெல்லாம், இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகி மீண்டவர்கள் வேலைக்கு திரும்புவார்கள் என்பதே -இந்த நோய் தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கு மீண்டு வரும் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து நமக்கு இதுவரை எந்த தரவும் இல்லையென்றாலும், அதனை நாம் பொருட்படுத்துவதில்லை.  ஒருவேளை முகக் கவசம் அணிவதும், தனியிடங்களில் இருத்தலும், இந்த நோய் பரவலை மட்டுப்படுத்தலாம். ஒரு வேளை கடுங்கோடை இதனை கொன்றழிக்கலாம், ஆனால், வருடம் முழுவதும், வெப்பமாக இருக்கும் சிங்கப்பூர் மற்றும் இதரப் பிரதேசங்களில் இது பரவிய போதும், நாம் இவ்வாறு நம்புகிறோம். ஏதாவது அதிசயங்கள் நடந்து விடாதா என்பதே நமது நம்பிக்கையாக தற்போது உள்ளது - ஏதாவது ஒரு வழியில் வைரஸ் தானாகவே சென்று விடாதா என்ற நம்பிக்கை உட்பட. 

வெற்று நம்பிக்கை உதவுமா?

1990களில், ”பார்ட்னர்ஸ் இன் ஹெல்த்” என்ற உலகளாவிய அமைப்பின் சக நிறுவனர் என்ற வகையில், வளரும் நாடுகளில்,  கூட்டு மருந்து எதிர்ப்பு வளர்ந்த(எம்.டி.ஆர்-டி.பி) காசநோயாளிகளுக்கு உதவியுள்ளேன். இரண்டாயிரமாவது ஆண்டுகளின் தொடக்கத்தில், நான் உலக சுகாதார அமைப்பின், ஹெச்.ஐ.வி. / எய்ட்ஸ் துறையை வழிநடத்தியுள்ளேன், அதன் பிறகு, உலக வங்கியின் தலைவராக இருந்துள்ளேன், ஹைட்டி நாட்டில் காலரா பரவிய போதும், மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா பரவிய போதும், அவற்றிற்கு எதிரான பணிகளில் நான் முன்னின்றேன். நான் வளர்ந்த பிறகு, எனது வாழ்க்கையையே இப்பெருந்தொற்றுகளுக்கு எதிரான போராட்டத்தில்தான் செலவிட்டுள்ளேன்.  அந்த போர்முனை அனுபவம் எனக்கு கற்றுக் கொடுத்தது என்னவெனில், நம்பிக்கை கொள்வது அற்புதமான செயல் என்பதை, அதிலும் கஷ்டமான செயலை முன்னெடுக்கும் போது. ஆனால், தொற்று நோய் என்று வரும் போது வெற்று நம்பிக்கை சிறு பலனைக் கூட அளிக்காது, ஒருவேளை அந்த நம்பிக்கையானது, துணிவு மற்றும் வீரியமான திட்டம் போன்றவற்றை, தனது துணையாகக் கொண்டு வந்தாலேயொழிய.

இந்த கொள்ளை நோயை மற்றெந்த நாடுகளைவிடவும் சிறப்பாக நிர்வகிக்கும் தென்கொரியா, இத்தகைய ஒரு திட்டத்தை கடைபிடிக்கிறது. அங்கு மக்கள் பேசும் போது, கோவிட்-19 என்பதை ஒரு மனிதன் போன்றே குறிப்பிடுகின்றனர். கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைவர்கள் பேசும் போது, இந்த வைரஸ் பதுங்கியிருக்கும், மோசமானது மற்றும் நீடித்திருக்கக் கூடியது; ஆகவே அதனை வேட்டையாடி வீழ்த்த வேண்டும் என்கின்றனர். சிங்கப்பூர் மற்றும் சீனாவில், பொது சுகாதாரப் பணியாளர்களின் பெரும் படை போர்க்கால அடிப்படையில், உயிருடன் கண்முன்னே நிற்கும் ஒரு பகைவனை எதிர்த்துப் போரிடுவது போல் போரிடுகின்றனர். ஆனால் இப்படிப்பட்ட ஒரு எதிரியின் முன், அமெரிக்காவின் செயலின்மை புதிராகவும், நமது வரலாற்றில் மிகச்சிறந்த அத்தியாயங்களுக்கு தகுதியற்றதாகவும் உள்ளது. நாம் இதனை எதிர்த்து போரிட வேண்டிய தருணம் வந்துவிட்டது. இப்பொழுதும்கூட இது மிகவும் காலதாமதமல்ல. நாம் இப்பொழுதும்  அணிதிரட்டி, வைரசை வேட்டையாடி வீழ்த்தலாம். தேவை என்னவெனில், பொது சுகாதாரத்தில் தீர்மானகர மான முதலீட்டு முன்னெடுப்புகள், இந்த சவாலை சந்திக்க போதுமான அளவில் அவை மேற்கொள்ளப்பட வேண்டும். 

நம்மிடம் உள்ள ஆயுதங்கள் எவை?

மிக முக்கியமான, மிக நுட்பமான தரவு, சமீபத்தில், சீனாவின் வுஹான் மாகாணத்தின், முப்பத்தி இரண்டாயிரம் கொரோனா நோயாளிகள் பற்றிய ஆய்வுகள், மிகவும் மதிப்புவாய்ந்த “ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன்” இதழில் வந்துள்ளது. இந்த ஆய்வு, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் ஹார்வர்டு டி.ஹெச். சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் மற்றும் வுஹான் நகரின் டோங்க்ஜி ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் ஆகியவனை இணைந்து கூட்டாக நடத்திய ஆய்வுகளின் முடிவுகள்.  இந்த ஆய்வுகள், கொரோனா வைரஸை கட்டுபடுத்த சில உத்திகளை கோடிட்டு காட்டுகின்றன. குறைந்தபட்சம் தற்போதுள்ள நிலைமைகளுக்கு ஏற்ப. 

முதன் முதலில், வுஹானில் வைரஸ் எந்த தடையும் இன்றி மிக மிக வேகமாக பரவக் கூடியதாக இருந்தது. அதிகாரிகள், நகரத்தின்  செயல்பாட்டை ஊரடங்கு மூலம் நிறுத்தி வைத்தனர், அதன் பிறகு, “வரைபடம் நேர்கோடாகத்” தொடங்கியது. பரவுதல் விகிதம் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தது, ஆனால், அது மட்டுமே போதுமான நன்மையாக இல்லை. சீன அதிகாரிகள், அந்த ஊரடங்கை தளர்த்தும் போது, இந்த வைரஸ் மீண்டும் முன்பு போலவே வேகமாகப் பரவும் என்று கவலைப்பட்டனர். திறந்தால் வைரஸ் இல்லாத எதிர்காலம் இல்லை என்கிற நிலை இருக்கும் வரை ஊரடங்கு என்கிற வாதையை நீடிப்பதைத் தவிர வேறு வழியில்லை – அந்த இடத்தில்தான் நாம், அமெரிக்கா முழுவதும் இன்றைய தினம் நின்று கொண்டிருக்கிறோம். 

ஆகவே, வுஹான் நகரில் சுகாதார அதிகாரிகள் (இந்த வைரஸ்க்கு எதிராக) மிகவும் ஆக்ரோஷமான அணுகுமுறையைக் கையாண்டனர். அவர்கள், பரந்துபட்ட  தொற்று இருக்கிறதா என்பதற்கான பரிசோதனைகளை கொரோனா மேற்கொள்ள ஆரம்பித்தனர், அதன் மூலம், தொற்றுக்கு ஆட்பட்ட அனைவரையும் கண்டறிந்தனர்.  அவ்வாறு தொற்றுக்கு ஆளானவர்களின் தொடர்பில் யார் யார் இருந்தனர் என்பதை கண்டறிந்து, அந்த நபர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கும் பரிசோதனைகள் மேற்கொண்டனர். அவர்கள் வைரஸ் இருக்க வாய்ப்புள்ளவர்களை தனிமைப்படுத்தினர், கொரோனா நோயாளிகளை மருத்துவமனைகளில் சேர்த்து, அவர்களுக்கு சிகிச்சையளித்தனர். அடுத்து அவர்கள் தங்களின் மருத்துவமனை வசதிகளை மேம்படுத்தினர், கிட்டத்தட்ட ஒரு டஜன் புதிய மருத்துவமனைகள். கொரோனா  தொற்றால் பீடிக்கப்பட்ட ஆரம்ப கால நோயாளிகளை அந்த மருத்துவமனை களில் வைத்து சிகிச்சை அளித்தனர். 

 ஐந்து அம்ச, ஐந்து ஆயுதங்கள்  சமூக விலகல், தொடர்பு கண்டுபிடித்தல் (காண்டாக்ட் டெரேசிங்), பரிசோதனை,  தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சை.  வுஹான் இந்த ஆயுதங்களை ஒரே சமயத்தில் பயன்படுத்தத் தொடங்கிய பிறகு, தொற்று பரவும் வேக விகிதம் மீண்டும் வீழ்ச்சியடைந்தது.  எந்தளவுக்கு வீழ்ச்சியடைந்ததென்றால் ஒரு தனி நபர் தொற்றால் பாதிக்கப்பட்டால் அவரால் பாதிக்கப்படுபவரின் எண்ணிக்கை ஒன்றை விட குறைவானது. அவ்வாறு நடந்து விட்டால், இந்த தொற்று என்பது மரித்து விட்டது என அர்த்தம். 

நாடுகளின் அனுபவம் என்ன?

தென் கொரியா, சிங்கப்பூர், தைவான், ஹாங்காங் – இந்த ஐந்து ஆயுதங்களை பயன்படுத்தி, அவர்களும் கூட இந்த வைரஸை கட்டுபடுத்துவதில் முன்னேற்றம் கண்டனர்.  உலகின் பல நாடுகளில் உள்ள தரவுகள், அவற்றில் ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியா அடங்கும், மிகவும் வலுவாக  பரிந்துரைப்பது என்னவெனில், முழுமையாக இந்த ஐந்து அம்ச அணுகுமுறை மட்டுமே கோவிட்-19  பரவலை நிறுத்தும் திறன் கொண்டவை என்பதே. இத்தாலி தற்போது வரை இந்த ஆயுதங்களை முழுமையாக அமல்படுத்தவில்லை, அங்கு, வைரஸ் பரவல் வேகம் மட்டுப்பட்டுவிட்டது, ஆனால், இந்த தொற்றை முழுமையாக நிறுத்தும் அளவிற்கு போதுமான அளவிலோ அல்லது பொருளாதாரத்தை மீண்டும் தொடங்க அனுமதிக்கும் அளவிலோ கட்டுப்படவில்லை. ஸ்பெயினும் அதே நிலையில் தான் உள்ளது. அமெரிக்காவில் நாம் பார்ப்பது என்னவெனில், எங்கெங்கெல்லாம், சமூக  தனிமைப்படுத்துதல் மிகவும் கட்டுப்பாடாக கடைப்பிடிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் இந்த கொரோனா பரவல் வரைபடம் தட்டையாக மாறுகிறது. ஆனால், அமெரிக்காவும் அனைத்து ஆயுதங்களையும் இன்னமும் பயன்படுத்தவில்லை. அமெரிக்கா  இன்னமும் கொரோனாவுக்கு எதிரான தாக்குதல் நிலைக்கே போகவில்லை, வைரஸ் மீதான  நேரிடையான தாக்குதலை மேற்கொண்டு, அதன் பரவுதலை நிறுத்திடவில்லை. 

மாறுபட்ட மஸ்ஸாசூஸெட்ஸ் அனுபவம்

அமெரிக்கா தனது யுக்திகளை மாற்ற வேண்டும். மஸ்ஸா சூ ஸெட்ஸ் நகரில் நடைபெறும் சம்பவங்களை  ஒரு புதிய தொடக்கமாக நாம் கொள்ளலாம். அந்த மாகாண ஆளுநர் சார்லி பேக்கர், மாநிலந்தழுவிய பரிசோதனை,  தொடர்பு கண்டறிதல்(காண்டாக்ட் ட்ரேசிங்), அவைகளைத் தொடர்ந்து மிகவும் கட்டுப்பாடான தனிமைப்படுத்துதல்(குவாரண்டைன்) மற்றும் சிகிச்சை  என்ற முழுஅளவிலான  ஒரு திட்டத்துடன் களமிறங்கியுள்ளார் . மாநில மற்றும்  உள்ளூர் சுகாதாரத் துறைகள், மாநில மருத்துவ காப்பீட்டு சந்தை மற்றும் தனியார் நிறுவனங்களான அக்சஞ்ஞர் மற்றும் சேல்ஸ்போர்ஸ் ஆகியவை அடங்கிய ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு, இந்த மாத இறுதிக்குள் நூற்றுக் கணக்கான புதிய அலுவலர்களை பணிக்கு எடுத்து ஒரு புதிய அமைப்பை கட்டமைக்க பணிகள் நடக்கின்றன.  பார்ட்னர்ஸ் இன் ஹெல்த்(கட்டுரையாளரின் சொந்த அமைப்பு), நோய்க்கு எதிரான தாக்குதலில் தனது உலகளாவிய அனுபவத்தை இந்த கூட்டமைப்புடன் ஒருங்கிணைத்துக் கொள்கிறது. இது ஒரு உண்மையான அணிதிரட்டல்:  தொற்று பரவலுக்கு எதிரான  ஐந்து அம்ச படைக்கலன்களைக் கொண்டு, இந்த அரசு வைரஸ் மீது நேரடியான தாக்குதலை தொடுத்துள்ளது  (அந்த முயற்சிக்கு நான் ஒரு சிறப்பு ஆலோசகர்). 

தொடர்புகளைக் கண்டுபிடித்தல்(காண்டாக்ட் ட்ரேசிங்) என்பதற்கு காலம் கடந்து விட்டது என மக்களில் பலர் நினைக்கின்றனர். அது ஆரம்பத்தில் நாட்டிலிருந்து இந்த தொற்றை வெளியேற்ற மிகவும் பயனுள்ளது; ஆனால், பரவிவிட்ட பிறகு மிகவும் கடினமானது என பலரும் நினைக்கின்றனர். ஆனால், இதற்கு முன்பு பரவிய பல்வேறு தொற்றுகளுக்கு எதிரான யுத்தத்தில் கலந்து கொண்ட அனுபவத்திலிருந்து நாங்கள் அறுதியிட்டு சொல்வது யாதெனின், நிச்சயம் இவை தவறான கருத்துக்கள். காலதாமதமாகிவிட்டது என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம், ஆனால் கோவிட்-19 வைரஸை கட்டுபடுத்தியதில் வெற்றி கண்ட நாடுகள் சுட்டுவது என்னவென்றால், தொடர்பு கண்டறிதல் (காண்டாக்ட் ட்ரேசிங்க்), ஒரு தொற்று அதன் உச்சத்தில் இருக்கும் போது கூட பயனளிக்கும் என்பதே. தொற்றுக்கு எதிரான தாக்குதலில், நீங்கள் எப்போதுமே காலதாமதமாகத்தான் இருப்பீர்கள். காலதாமதம் என்பதன் அர்த்தம், இனியும் எந்த நேரத்தையும் விரயமாக்கக்கூடாது என்பதுதான். 

தொடர்பு கண்டறிதல் என்பது நிச்சயமாக விரைவு மற்றும் துல்லியப் பரிசோதனைகளுடன் பின்னிப் பிணைந்தே செல்ல வேண்டும். நாமனைவரும் கேள்விப்படுவது, அமெரிக்கா முழுவதும், சுகாதார நிர்வாகிகள் விரும்பும் எண்ணிக்கையிலான பரிசோதனைகளை மேற்கொள்ள இயலவில்லை என்பதாகும். தற்போது கிடைக்கும் தொழிற்நுட்பங்களைப் பயன்படுத்தி, மஸ்ஸா சூ  ஸெட்ஸ் மாகாணம், அது நிர்வகிக்கும் பகுதிகளில் வியத்தகு வகையில், பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது, மார்ச் 9 ஆம் தேதி நாளொன்றுக்கு வெறும் 41லிருந்த பரிசோதனை எண்ணிக்கை  ஏப்ரல் 17ல்  8000 தாண்டியுள்ளது. “தி பிராட்” இன்ஸ்ட்டிட்யுட், தன்னுடைய பிரம்மாண்டமான,  மிக நவீன கம்யூட்டர் தொழிற்நுட்பத்துடன் இணைந்த சோதனைச் சாலைகளை ஒவ்வொரு நாளும், பல ஆயிரம் சோதனைகளை மேற்கொள்ளவும், அவற்றை  பகுத்தாராயவும் உறுதி எடுத்துள்ளது. இதர (அமெரிக்க) மாநிலங்களும் அவர்கள் பகுதியில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களின்  சோதனைச் சாலைகளை ஒன்றிணைத்து பயன்படுத்தினால்  இதே பலன்களைஅடையலாம்.

அமெரிக்கர்களுக்கு  உண்மையில் தேவைப்படுவது என்ன?

எங்களுக்கு சொல்லப்பட்டது யாதெனில், அமெரிக்கர்கள் தனிமைப் படுத்துதல் மற்றும் வீட்டில் இருத்தி வைக்கப்படுவதல் ஆகியவற்றிற்கு ஒப்புக்கொள்ளமாட்டார்கள்  என்பதாகும். ஆனால், உண்மை என்னவெனில், பெரும்பாலான மக்கள், எப்போது  தாங்கள் வைரஸ்  தொற்றால் பீடிக்கப்பட்டுள் ளோம், விரைவில் நோயில் வீழ்வோம் என தெரிந்து கொள்கிறார்களோ, அப்போதே வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வதன் அவசியத்தை உணர்கின்றனர். அவர்களுக்கு தேவைப்படுவதெல்லாம் உதவிதான். வீட்டில் உணவில்லை என்றால், வீட்டில் தனித்திருக்க முடியாது. செல்போனின் தொடர்பாளர்கள் உங்களை தொடர்பு கொள்ள காசு இல்லையென்றாலோ, அல்லது  போனே இல்லையென்றாலே   தனிமைப் படுத்திக் கொள்ளமாட்டார்கள். மேலதிகாரிக்கு நீங்கள் எத்தகைய சூழலில் இருக்கிறீர்கள் என்பதை சொல்ல உங்களுக்கு உதவி தேவைப்படும். உங்களுக்கு தேவைப்படுவது, நீங்கள் மீண்டும் உங்கள் குடும்பத்தை பழையபடி காப்பாற்றலாம் என்ற நம்பிக்கை. ஆசியாவில் இந்த வைரஸ்க்கு எதிரான தாக்குதலில் வெற்றி பெற்ற பல நாடுகள் இத்தகைய ஆதரவை தெரிவித்து நம்பிக்கையை விதைத்துள்ளன. தொற்று பாதிக்கப்பட்டவர்கள், வீடுகளில் தனிமையில் இருக்க பணிக்கப்பட்டவர்கள், அரசு தனிமைப்படுத்தும் இடங்களில் இருப்பவர்கள் ஆகியோருக்கு பணம் மற்றும் அவர்களுக்கு வேலை செய்ய ஆட்கள் தேவைப்படும். இந்த சந்தர்ப்பத்தில் ஏராளமான அமெரிக்கர்கள், தங்களின் அண்டைவீட்டுக் கார ர்களுக்கும், நாட்டிற்கும் சேவை செய்ய பாய்ந்தோடி வரத் தயாராக உள்ளனர். மேலும், ஏற்கனவே அரசு அறிவித்துள்ள பண உதவி மற்றும் மேலும் நாம் செய்ய யோசித்துக் கொண்டிருக்கிற உதவிகளோடு இதனை இணைத்தால், அவர்களை நாம் பயன்படுத்துவது நல்ல முடிவாகும். 

உண்மையில் ஒரு முழுமையான தீர்வு என்பது நோயுற்றவர்களை தவிர்த்து – அதிலும் குறிப்பாக வீடுகளில் தனிமையில் இருக்கும் வயதானவர் களை தவிர்த்துவிட்டு- எடுக்கும் முடிவுகள் தீர்வாக அமையாது. மருத்துவர் களின் மேற்பார்வையில், அரசு தனிமைப்படுத்துதல் கூடங்களாக மாற்றப்பட்ட விடுதிகளும், தங்குமிடங்களும் இந்த நோய்க்கு எதிரான தாக்குதலில் முக்கியப் பங்காற்றுகின்றன. நீங்கள் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளானாதாக அறியப்படும்போதோ அல்லது இந்த வைரசால் நீங்கள் நோயுற்ற போது அரசு அமைப்புகள் துள்ளிக் குதித்து செயலில் இறங்குவதாக நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். சுகாதாரதப் நிபுணர்கள் உங்களை கண்டறிந்து, உங்களுக்கு விளக்கங்கள் அளித்து, உங்களையும் உங்கள் குடும்பத்தினருக்கும் இந்த நோய் பற்றி விளக்கங்கள் அளித்து, ஒவ்வொருவரும் சரியாக அவரவர் கடமை களை சரிவர செய்ய உதவினால், நாம் அனைவரும் பாதுகாப்பாக இருப்போம், நாம் பேணப்படுவோம்.இதனை மீண்டும் மீண்டும் மீண்டும் செய்யுங்கள், நீங்கள் இந்த வைரஸை தோற்கடித்துவிடுவீர்கள். நீங்கள் வைரசுக்கு பிந்திய காலத்திற்கான அடித்தளத்தையும் இதன் மூலம் அமைத்துவிடுவீர்கள். 

மஸ்ஸாசூஸெட்ஸ் நகரில் , இந்த வைரஸ்க்கு எதிரான எங்கள் தாக்குதல்  3 வாரங்களுக்கு முன் துவங்கியது. இந்த காலத்தில் நாங்கள் எதிர்பாராத ஏராளமான பிரச்னைகளை சந்தித்தோம். அமெரிக்காவின் ஒவ்வொரு மாநிலமும் வித்தியாசமானது, அந்தந்த மாநிலத்தின் சிக்கலான நிலைமைகளுக்கு ஏற்ப, வழிகளை கண்டறிய வேண்டும், அதிலும் முக்கியமானது எதுவெனில் நாங்கள் ஏற்கனவே தொடங்கியதுதான். 

அமெரிக்காவின் பரிதாபம்

பரிதாபகரமான விஷயம் என்னவெனில், நமது நாடு (அமெரிக்கா) இத்தகைய தொற்றுகளுக்கு எவ்வித தயாரிப்பும் இன்றி உள்ளது. நமது சுகாதர மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு தேவையான முகக் கவசம் நம்மிடம் இல்லை, அதே போன்று போதுமான பரிசோதனை கிட் - களும் நம்மிடம் இல்லை. உண்மை யாதெனின் நாம் பொது மருத்துவத்தில் போதுமான அளவு முதலீடு செய்யவில்லை. நமது தேசியத் தலைவர்கள் மிக முக்கியமான இரண்டு டிரில்லியன் டாலர் பெறுமானமுள்ள ஊக்கத் தொகை மசோதாவை நிறைவேற்றியுள்ளனர், மேலும் பல டிரில்லியன் டாலர் பெறுமானமுள்ள ஊக்கத் தொகை மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டாம் எனில், இந்த வைரஸ்க்கு  எதிரான போரில் நாம் நேரிடையாக பணத்தை முதலீடு செய்ய வேண்டும். நமது அரசின் செலவுகளை இந்த நோய் தொற்றை முடிவுக்கு கொண்டுவரும் வகைக்கு ஒத்திசைவாக மாற்ற வேண்டும். அமெரிக்க அரசின் கருவூலத்தின் சட்டங்களை நாம் மறு ஆய்வு செய்து, முறையான பொது மருத்துவக் கட்டமைப்பு  உடனடியாக ஏற்பட என்னென்ன செலவுகள் செய்ய வேண்டுமோ அவற்றை செய்திட வேண்டும்.  அத்தகைய முயற்சிகளை மேற்கொள்ள ஆகும் செலவு – ஒரு வேலை சில நூறு பில்லியன் டாலர்களாக இருக்கலாம் – ஆனால் பதுங்கு குழியில் இருப்பது, காத்திருப்பது மற்றும் அதிசயங்கள் நடப்பது போன்றவற்றை எதிர்பார்த்து இருப்பதோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மிகக் குறைவான தொகையே. 

இப்போதைய யதார்த்தம் என்ன?

பத்திரிக்கையாளர்கள், பொருளாதாரவாதிகள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோர் இந்த பெரும் தொற்று எவ்வாறு பரவும் என்பது குறித்து பல்வேறு மாதிரிகளை விவாதித்துக் கொண்டும், ஆராய்ந்து கொண்டும் இருக்கிறார்கள். இந்த மாதிரிகள் மிகவும் மோசமான மற்றும் மிகவும் நம்பிக்கையூட்டும் ஆரூடங்களை ஒரு சேர தருகின்றன. ஆனால், இவற்றில் பெரும்பாலான மாதிரிகளுக்கு அடிப்படை, அரைகுறையான தரவுகளாக இருக்கின்றன; அல்லது ஒரு சில அனுமானங்கள் அடிப்படையாக உள்ளன. இவை சரியாகவும்  இருக்கலாம், அல்லாமலும் போகலாம். இவற்றில் சில மாதிரிகள், வுஹான் நகரில் இந்த நோய் பரவியதன் அடிப்படையில் அமைக்கப்பட்டவை. ஏப்ரல்  பின் பாதியில் இந்த தொற்று உச்சத்தை எட்டியுள்ளது.

ஆனால், இன்னும் வுஹான் பொது மருத்துவத்துறையின் எதிர்வினை போன்று அமெரிக்கா எந்த  தாக்குதலும் இதுவரை தொடுக்கவில்லை என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். இத்தகைய தொற்றுகளை கடந்த காலங்களில் எதிர்த்து களத்தில் நின்றவர்களுக்கு யதார்த்தம் தெரியும். இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தப்பிக்க முழுமையாக ஐந்து அம்ச திட்டத்தை அமல்படுத்தி அதனை வருங்காலத்திற்கும் தயாராக வைத்திருத்தலே அது. இத்தகைய ஒரு திட்டம் இல்லையென்றால், புதிதாக  தொற்று ஏற்படுகிறதா என்பதையோ அல்லது எந்த பகுதியில் நடக்கிறது என்பதையோ நாம் அறிந்து கொள்ள முடியாது.  எப்போது நாம் பாதுகாப்பாக பயணக் கட்டுபாடுகளையும், சமூக விலகல் நடவடிக்கைகளையும் தளர்த்தலாம் என்பதை அறிய முடியாது, மக்களுக்கு அவர்கள் வழக்கமான வாழ்க்கைக்கு மீண்டும் திரும்பலாம் என்ற நம்பிக்கையை அளிக்க முடியாது. தடுப்பூசி, ஒரு வேளை கண்டுபிடிக்கப்பட்டாலே கூட அடுத்த ஒரு வருடத்திற்குள் தயாராக கிடைக்காது. அது வந்து சேரும் வரையில், பொருளாதாரத்தை மீண்டும் செயல்படுத்த ஒரே ஒரு வழிதான் உள்ளது: விடாமுயற்சி, குறிவைத்து செயல்பாடு, விரைவான செயல்பாடு மற்றும் முழுமையான பொது சுகாதார எதிர்வினை ஆகியவைகளே அவை. 

இத்தகைய ஒரு அமைப்பை உருவாக்கி அதனை செயல்படுத்த மேலும் ஒரு காரணம் உள்ளது. தற்போது குறைந்த பட்சம் 185 நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர், சீனா மற்றும் தென் கொரியா அவர்களின் எல்லைகளுக்கும் தொற்று பரவலை கிட்டதட்ட நிறுத்திவிட்ட பிறகு, உள்நாட்டிலேயே மறுபடியும்  உருவாகும் தொற்று, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் புதிய தொற்று ஆகியவற்றை கட்டுப்படுத்த அவ்வப்போது தற்காலிக ஊரடங்கு அமல்படுத்த வேண்டியிருக்கும். இந்த வியாதி உலகை மிக நீண்ட காலத்திற்கு சுற்றி வர இருக்கிறது. இந்த வைரஸ் பருவகால ப்ளூ காய்ச்சல் போன்றது, மேலும் ப்ளூ போன்று இதுவும் அடிக்கடி  மரபணு பிறழ்வு  செய்து, தடுப்பு மருந்து தயாரிப்பவர்களுக்கு எப்போதும் மாறிக் கொண்டிருக்கும் ஒரு இலக்காக இருக்கும். ஒரு நீண்ட கால திட்டம் இல்லாமல், நாம் இத்தகைய ஊரடங்கு, ஊக்கத் திட்டம் , காத்திருத்தல், நம்பிக்கை கொள்வது போன்ற சுழற்சி களில் சிக்கிக் கொண்டு, இதற்கு ஒரு முடிவே இல்லாமல் சென்றுகொண்டிருப்போம். 

நாங்கள் இந்த திட்டத்தை ஆளுநர் பேக்கரிடம் அளித்த போது, அவர் அது மிகுந்த செலவு பிடிக்கும், மிகவும் கடினமானது அல்லது மிகவும் காலதாமத மானது என்றெல்லாம் சொல்லவில்லை. அவர் சொன்னது இதுதான்: “நாம் இதனை செய்திட வேண்டும். நமக்கு வேறு வழியில்லை. இதிலிருந்து தெரிவது நாம் வெறுமனே உட்கார்ந்து கொண்டு காத்திருக்கிறோம். நாம் வைரஸ்க்கு எதிரான  தாக்குதலை தொடுக்க வேண்டும்”. அந்த தருணம், எங்கள் ஒவ்வொருவருக்கும் எழுச்சி ஏற்பட்ட தருணம்.

தற்போது நாங்கள் வைரஸ்க்கு எதிரான தாக்குதலை தொடுத்துக் கொண்டிருந்தாலும், எங்களுக்கு இந்த வைரஸ்சை தோற்கடிக்க ஒரு பாதை தெளிவாக தெரிகிறது. இதையே பெரும்பாலான அமெரிக்கர்கள் விரும்புகிறார்கள் என நான் நம்புகிறேன், ஆகவே, அவர்கள் உற்சாகத்துடனும், பற்றுறுதியுடனும், இத்தகைய இலக்கை நோக்கி பயணப்பட தயாராக இருக்கிறார்கள். வைரஸ்க்கு எதிரான நீண்ட கால, இந்த ஐந்துஅம்ச பொது சுகாதார திட்டம் என்பது அமெரிக்காவில் மிகப்பெரிய சவாலாக நான் நினைக்கிறேன். ஆனால், அது நமது தலைமுறைக்கு அடிப்படையான தர்மீகக் கடமையாகும். 

நியூயார்க்கர் (ஏப்ரல் 20)
தமிழில் : க.ஆனந்தன்






 

;